Monday, June 4, 2012

நம்ப முடியுமா?


அரசியல்வாதிகள் குழுவொன்று தூரப் பகுதி ஒன்றுக்கு பஸ் வண்டியொன்றில் பிரயாணம் செய்துகொண்டிருந்தது. கிராமப் புறமொன்றினூடகச் செல்லும் போது வண்டி மரமொன்றில் மோதி ஒரு வயலினுள் போய் விழுந்தது. அதிலிருந்த அரசியல்வாதிகள் எவரும் எழுந்திருக்கவில்லை.

அவ்வயலில் வேலை செய்துகொண்டிருந்த கிராமத்து விவசாயி இந்த விபத்தைக் கண்டான். அவன் பெரிய குழியொன்றைத்  தோண்டி அந்த அரசியல்வாதிகளையெல்லாம் புதைத்து விட்டான்.

மறுநாள் அவ்வழியாக வந்த போலிஸ் அதிகாரியொருவர் பஸ் வண்டியைக்கண்டு என்ன நடந்தது என்று விவசாயியிடம் விசாரித்தார். நடந்ததை அவன் விவரித்தான். “எல்லோரையும் புதைத்து விட்டீரா? அவர்களில் ஒருவராவது உயிரோடிருக்கவில்லையா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டார் அதிகாரி.

“தாம் சாகவில்லை எனச் சிலர் சொன்னார்கள் தான். ஆனால் அரசியல்வாதிகளின் பேச்சை நம்ப முடியுமா வாயைத் திறந்தால் பொய்யைத்தானே பேசுவார்கள்!”. என்று விளக்கமளித்தான் விவசாயி

பெரிதாக ஒன்றும் இல்லை


ஒரு கல்லூரியில் இருந்த நாணயம் போட்டுப் பேசும் தொலைபேசியை அங்குள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் பயன்படுத்தி வந்தனர். சில நாட்களாக அந்தத் தொலை பேசி பழுதாகி வேலை செய்யாமல் இருந்தது. இதைக் கண்ட மாணவனொருவன் அதனை உடனடியாக திருத்தித் தருமாறு வேறொரு தொலைபேசி மூலம் தொலைபேசிக் கம்பனியிடம் வேண்டிக்கொண்டான்.

அவன் முறைப்பாடு செய்த போதெல்லாம்இதோ வருகிறோம்”,  “நாளை வருகிறோம்” என்ற பதில்களே வந்தன. ஆனால்  திருத்திய பாடில்லை.

சில நாட்களுக்குப் பின் அந்த மாணவன் மீண்டும் தொலைபேசிக் கம்பனியிடம் தொடர்பு கொண்டுஇனி நீங்கள் வரத் தேவையில்லை.தொலைபேசி நன்றாக வேலை செய்கிறது . ஒரு சிறு பிரச்சினையைத் தவிர” என்று கூறினான்.

“அது என்ன பிரச்சினை?” எனக் கேட்டது கம்பனி. “பெரிதாக ஒன்றும் இல்லை. நாம் பேசி முடிந்த பின்னர் போட்ட நானயமெல்லாம் திரும்பி வந்து விடுகின்றன” என்றான் மாணவன்.
மறு நாளே தொலைபேசியை திருத்துவதற்கு ஆட்களை அனுப்பி வைத்தது கம்பனி.